உலக கலாச்சார பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் மழை நீர் வடிய வழியில்லாததால் பாசி பிடித்து நாற்றமெடுக்கும் நிலையில் உள்ளது
தமிழர்களின் வரலாற்றை, கலையறிவை, கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் எண்ணற்ற வரலாற்று ஆதாரங்கள் தமிழ்நாடு முழுக்க நிரம்பியுள்ளன. ஆனால் அதை அரசும், மக்களும் எந்தவகையில் பேணிக்காக்கின்றனர் எனும் கேள்வி எழுகிறது.
ஆட்சியாளர்கள் பாரவையிடவரும்போது கண்டுகொள்ளப்படும் பாரம்பரிய சின்னங்கள் அதன்பின் கண்டுகொள்ளப்படுவதில்லை.
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது ஐராவதீஸ்வரர் ஆலயம். தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஆலயம் உலக கலாச்சார பாரம்பரிய மரபு சின்னங்களில் ஒன்றாக மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.
900 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மேடாகவும் ,கோவில் தாழ்வான பகுதியிலும் அமைந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் இவ்வாலயத்தில் தண்ணீர் தேங்கி வடிய வழியில்லாமல் உள்ளது. அவ்வப்போது மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.